போர் முடிவுக்கு வந்துள்ள போதும், வடக்கு,கிழக்கு பகுதியில் மக்கள் சொந்தக்காணியில் குடியமர முடியாமல் இருக்கின்றனர். காணி சுவீகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் உண்மையான நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படமாட்டாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“போர் முடிந்து விட்டது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது, தமிழ் மக்கள் இனி நிம்மதியாக தமது சொந்த இடங்களில் வாழலாம் என்று சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது எல்லாம் எதிர்மாறாகவே நடைபெறுகிறது.
தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு விடை காண வேண்டும்.
விடுதலைப் புலிகள் பற்றி கூறுகிறார்கள், விடுதலைப் புலிகளின் தவறுகளுக்காக தமிழ்மக்களைத் தண்டிக்கக் கூடாது.
விடுதலைப் புலிகளை உருவாக்கியவர்கள் நீங்கள் தான்.
மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தான் விடுதலைப் புலிகளை உருவாக்கினவே தவிர நாங்கள் அல்ல.
பண்டா - செல்வா உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தமிழ்மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதப்போராட்டத்தில் இறங்குவதைத் தவிர்த்திருக்கலாம்.
அந்த உடன்பாடு தமிழ்மக்களின் பண்பாடு மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருந்தது.
இரு சிங்களக் கட்சிகளுக்கும் இடையிலான போட்டியினால் அந்த உடன்பாடு கிழித்தெறியப்பட்டது.
ட்டலி - செல்வா உடன்பாடு கூட நாட்டில் இரத்தக் களரி ஏற்படுவதைத் தடுத்திருக்கும். ஆனால் அதற்கும் இடமளிக்கவில்லை. இதன் விளைவாகத் தான் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றது.
இன்று இராணுவ வெற்றியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்ற அரசியல் முனைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்மக்கள் மீண்டும் ஒரு வன்முறையில் இறங்குவதை வரவேற்கவில்லை. ஏனைய இனத்தவருடன் சமத்துவமாக, சமஉரிமைகளுடன் வாழவே விரும்புகின்றனர்.
சம்பூரில் 1128 ஏக்கர் நெற்காணிகள் உட்பட 2795 ஏக்கர் காணியில் மக்கள் மீளக்குடியேற முடியாமல் உள்ளனர்.
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணில் வாழமுடியாத நிலையில் மக்கள் திண்டாடுகின்றனர்.
இதுபற்றி இந்திய அரசுடன் பேசினேன், இந்தியப் பிரதமருடனும் பேசினேன். இந்தியா இந்த மக்களைத் துரத்தி விட விரும்பவில்லை.
இந்தநிலையில், சம்பூரில் மீளக்குடியேற முடியாமல்- இடம்பெயர்ந்துள்ள மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அவ்வாறு போக மறுத்தால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் நிறுத்தப்படும் என்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
அபிவிருத்தி தேவை தான், அனல் மின்நிலையம் தேவை தான். அவை கூடாது என்று நான் கூறவில்லை.
மின் உற்பத்திக்காக நிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.
ஆனால் உங்கள் மின்நிலையத்துக்குக் காணி எடுக்கும் வரை அந்த மக்கள் அங்கேயே இருக்கட்டும்.
எவ்வளவு காணி எடுக்கப்படுகிறதோ, எடுத்து விட்டு எஞ்சிய பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும்.
சம்பூரில் மீளக்குடியேறத் தடைவிதிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் புனிதமான இந்துக் கோவில் ஒன்று உள்ளது.
அந்த பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு நான் சிறுவனாக இருந்த போது சென்றிருக்கிறேன்.
அது ஒரு சக்திவாய்ந்த கடவுள்- அதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.“ என்றும் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.
ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை சமர்ப்பித்து ஆற்றிய உரையில் இரா.சம்பந்தன், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் 11 பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்.