என் தலைமாட்டில் அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்தவர்கள் தண்ணீரையும் உணவையும் பற்றியே கதைத்தார்கள்.
‘அதை இதுக்க வை. மற்றதை என்ர பேக்குக்குள வை. போத்தில் தெரியாமல் மறைச்சு வையப்பா. பிறகு கண்டதுகளும் வந்து தண்ணி கேக்குங்கள்’
‘அன்ரி அந்த போத்தில என்னட்ட தாங்க அன்ரி. நான் என்ர பேக்குக்குள்ள வைக்கிறன்’ என்றெல்லாம் கதைகள். தண்ணீருக்கு மணம் குணமெல்லாம் இல்லைத்தான் என்றாலும் தான் போத்தில் போத்திலாக அருகில் இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்திவிட்டது.
எனக்கு தாகம் தாகமாய் தவித்தது. தண்ணீரும் உணவும் சேகரித்துக்கொண்டு வந்தவனாகத்தான் இருக்கவேண்டும். அவன் பையொன்றின்மீது சரிந்தபோது அவனது தலை என் தலையில் இடித்தது.
‘ஓ யாரோ தெரியேல்லை’ என்று முணுமுணுத்தபடி எழுந்திருந்து உற்றுப் பார்த்தான். பின்பு சற்று தள்ளிச் சரிந்தான். எனினும் எங்களது தலைகளுக்கு இடையே ஒரு சாண் இடைவெளிதான் இருந்தது. அவன் வயிறுமுட்ட தின்றிருக்கிறான் என்பதை அவனது ஏப்பம் பறைசாற்றியது.
‘அந்த தண்ணி போத்தலை ஒருக்கா தாப்பா’ என்றான். அவன் நீர் அருந்தும் ஒலி தொண்டையில் கடகடத்தது. மீண்டும் சரிந்துகொண்டான்.
என்னருகே இன்னமும்தான் அந்த வயோதிப தம்பதி இருந்துகொண்டிருந்தது. இருட்டிவிட்ட போதும், பொழுது இரவின் நடுப்பகுதியாக இருந்தபோதும், ஏன் குந்திக்கொண்டு இருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.
‘அப்பா நான் உங்கட பாக்கில தலைய வைச்சு படுக்கட்டுமா அப்பா’ என்றேன் நயமாக.
‘ஓம் பிள்ள படு படு’ என்றார் அந்த வயோதிபரும் ஆதரவாக. என் பையை தூக்கி பிடறிக்கு மறைப்பாக வைத்துக்கொண்டு அப்பாவும் அம்மாவும் இருந்த பக்கமாக சரிந்து கண்களை மூடிக்கொண்டேன்.
அந்தநேரம் எனக்கொரு சிறிய பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டது. மனதுக்கு சற்று ஆறுதலாகவும் இருந்தது. இதே அப்பாவையும் அம்மாவையும் இன்னொரு தடவை கண்டால்கூட இவர்கள்தான் என்று இனங்கண்டு கொள்வேனா? இல்லை. ஏனெனில் அவர்கள் தோற்றத்தால் என்னில் எந்த நினைவுப் பதிவையும் ஏற்படுத்தவில்லை. மிகமிக மங்கலாகத்தான் என் நினைவில் அவர்களது தோற்றம் பதிந்துள்ளது. என்றாலும் அவர்கள் தந்த இந்த ஆதரவு உணர்வை என்றைக்குமே என்னால் மறக்க முடியாது.
அவர்கள் யாருக்காக காத்திருக்கிறார்களோ? அவர்கள் யாரை நம்பி வந்தார்களோ? அந்த வயோதிபர்களை தாங்குவதற்கு போகுமிடத்தில் யாராவது இருப்பார்களோ என்னவோ? என்றெல்லாம் விடைதேட முயாத வினாக்களுடன் அப்படியே அயர்ந்து உறங்கிவிட்டேன்.
எவ்வளவுநேரம் உறங்கினேன் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நல்ல உறக்கம். நீண்ட நாட்களுக்குப்பின்பு வெடியோசைகள் உலுப்பியெழுப்பாத ஒரு உறக்கம்.
விழிப்பு நிலையை அடைந்தபோதும் முகங்களை அடையாளம்காணும் அளவுக்கு வெளிச்சம் போதவில்லை.நள்ளிரவு தாண்டிய பொழுதா அல்லது அதிகாலையா என்று எனக்கு இனங்காணத் தெரியவில்லை.
வயிறு பயங்கரமாய் பிராண்டியது. நாக்கு மடமடப்பது போன்ற உணர்வு. தண்ணீர் குடித்தே தீரவேண்டும் என்றிருந்தது. என் தலைமாட்டில் இருந்த குடும்பம் இன்னமும் கலகலத்துக்கொண்டுதான் இருந்தது. அவர்களது பேச்சில் எந்த கவலையுமே தென்படவில்லை.
‘அண்ண, தண்ணி கொஞ்சம் தாறிங்களா?’ என்று எழுந்தமானத்தில் கேட்டுவிட்டேன். தருவான் என்ற நப்பாசையில்தான் கேட்டேன். அவனோ தன்பாட்டில் இருந்தான் ஒன்றுமே விளங்காதவனைப்போல அல்லது நான் அவனை கேட்கவில்லை என்பதைப்போல. எனக்கு சங்கடமாகத்தான் இருந்தது. முன்பின் அறியாத அவர்கள் எனக்கு உதவுவார்கள் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்?
‘நீ யார்? உனக்கு எதுக்காக நான் தண்ணி தரணும்?’ என்று நாகரீகமோ மனச்சாட்சியோ இல்லாமல் அவன் தாறுமாறாக சத்தம்போட்டுவிட்டால்? அப்படி நடந்துகொள்ளக்கூடியவர்களும் இருக்கிறார்கள்தானே. இவர்களும் அப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தால்? சுயநலம்மிக்கவர்களாகத்தான் இருப்பார்கள் என்று அவர்களது பேச்சே சொல்கிறதே.
சாமத்தில்கூட தாகம் ஏற்படுமா? அதுவும் இத்தனை தவிப்பாய்? உச்சிவெய்யிலில் நிற்பதைப்போல அந்த இரவிலும் தண்ணீருக்காக ஏங்கினேன். மெதுவாக எழுந்து அமர்ந்துகொண்டேன். தலைமாட்டில் கிடந்த அவன் கேட்டான்,
‘அக்கா நீங்க இயக்கமோ?’
‘தண்ணி கொஞ்சம் தாறிங்களா? என்றேன்.
‘உந்த பொம்பிளயள் நித்திரையா போகட்டும். இப்ப கேட்டால் தறாளவை.’ என்றான்.
‘ஒரு மூடித்தண்ணி காணும். நாக்கை மட்டும் நனைக்கத்தான்’ என்றேன் என்னையும் அறியாத கெஞ்சலாய்.
‘ம். பிறகு எடுத்து தாறன். அதுசரி நீங்க இயக்கமோ?’
‘ம்’ என்றேன்.
‘இயக்கம்விட்ட பெரிய பிழை என்னெண்டால் கட்டாயமாய் ஆக்களை பிடிச்சதுதான். கடைசில படுமோசமாய் நடந்துகொண்டார்கள்’ என்று அவன் பிரசங்கமே பண்ண தொடங்கிவிட்டான்.
இலட்சக்கணக்கான மக்கள் பசியோடும் தாகத்தோடும் கிடக்கும்போது இவன் என்னடா என்றால் ஒரு சொல்லுக்குக்கூட அர்த்தம்கெட்ட பிரசங்கம் செய்கிறானே.
எனக்கு அந்த தடியன்மீது எரிச்சலாய் இருந்தது. போத்தில் போத்திலாய் தண்ணீரை வைத்துக்கொண்டு ஒரு மூடியில் தரக்கூடியளவு சொட்டுத்தண்ணீரைக்கூட தாகத்தோடு தவிப்பவனுக்கு ஈய விரும்பாத இவனெல்லாம் போராட்டத்திற்கு எப்படிப்பட்ட பங்களிப்பை செய்திருப்பான்.
மனிதநேயம் அற்றவன்தான் இவனென்று சில கணங்களிலேயே புரிந்துவிட முடிகிறது. தாய்நாட்டுக்காக தம்மை தேய்த்தவர்களிடம்போய் போராளிகளைப்பற்றி வசைபாடி கொண்டிருக்கிறானே. விமர்சிப்பது மட்டுமா?
‘அப்ப உங்கட ஊர் எது?’
‘வீட்டுக்காரர் போட்டினமோ?’
‘நீங்க எத்தினையாம் ஆண்டு காயப்பட்டிங்க? எத்தினபேருக்கு இப்ப கைகால் இல்லாமல் போட்டுது. கை கால் எல்லாம் இல்லாட்டி கஸ்ரம்தான் என்ன?’
என்ற அவனுடைய தொடர்ச்சியான கேள்விகளாலும் விளக்கங்களாலும் என்னுள் எழுந்த கோபத்திற்கு அவனை அறைந்தால் என்ன என்றிருந்தது.
‘எனக்கு ஏலாமல் கிடக்கண்ண. என்னட்ட கதை கேட்காதிங்க’ என்றேன் பொறுமையாக.
‘என்னப்பா அங்க யாரோட அலட்டிக்கொண்டு கிடக்கிறியள். ஆமிக்காரர் தண்ணிப்போத்தல் குடுக்கிறாங்களாம். போய் அஞ்சாறு வாங்கி வாங்களன்’ என்று கட்டளை இட்டது பெண் குரல்.
அது அவனுடைய மனைவியாகத்தான் இருக்கவேண்டும். அவளின் குரல் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
‘சும்மா இரப்பா. இருக்கிறது நமக்கு காணும்தானே.’ என்று குரலை தாழ்த்தி இரைந்தான் அவன்.
‘நீங்கள் என்னப்பா. சும்மாதானே குடுக்கிறான். நாலைஞ்ச வாங்கியந்தால் நூறு நூற்றைம்பதுக்கு விக்கலாமெல்லே’ என்று அவள் நியாயம் சொன்னாள்.
‘அப்ப நீ போய் வாங்கி வா. என்னைய கொஞ்சநேரம் கிடக்கவிடு’ என்று அவன் உறுமினான். பின்பு புறுபுறுக்கத் தொடங்கினான்.
‘இருக்கிற இடத்துக்கு எல்லாம் வருகிதுதானே. போய் அடிபட்டு விழுந்தடிச்சு வாங்கிறவனுக்குதானே அதில உள்ள கஸ்ரம் தெரியும்.’ என்று அவனும்
‘இந்த மனுசனுக்கு ஒண்டும் தெரியாது. பிழைக்கத்தெரியாத மனுசன்’ என்றெல்லாம் ஏதேதோ சொல்லி அவளும் இரைந்தாள்.
எனக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது. என்ன மனிதர்களோ என்ன குணங்களோ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன். ஒரு போத்தில் தண்ணீர் ஐந்நூறு ரூபா என்றாலும் நான் வாங்கத் தயாராகத்தான் இருந்தேன். ஆனால் அவனிடம் பேச எனக்கு துளியும் விருப்பமில்லை. அவனிடம் வாய் திறப்பதில்லை என்ற முடிவோடு இருந்து விட்டேன்.
தாகம் என்னை பயங்கரமாய் இம்சித்தது. இப்படித்தானே அந்தப்பையன்களுக்கும் இருக்கும். அவர்கள் அன்மையில் காயமடைந்தவர்கள் என்பதால் என்னைவிட அதிகமாக துன்பப்படுவார்கள்.
இப்போது என்னிடம் ஒரு போத்தில் தண்ணீர் இருந்தால் அவர்களுக்கும் கொடுப்பேனே என்று வெறும் நினைவுகளோடு ஏங்கினேன்.
சற்று நேரத்தின் பின் தலை மாட்டில் கிடந்த குண்டன் கதை கேட்டான். நான் செவிடு போல இருந்து விட்டேன். எனக்குள் ஒரே எரிச்சலும் குமைச்சலுமாக இருந்தது. அவ்விடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. எழுந்து குந்திக்கொண்டேன்.
“என்னக்கா நித்திரை வரேல்லயோ?’ என்று கதையை வளர்க்க எத்தனித்தவனுக்கு இடமளிக்காமல் எழுந்து நின்றேன். சுற்றயலை பார்த்தேன். மிக மங்கலாய் தான் வெளிச்சமிருந்தது.
மின் விளக்குகள் ஒளிர்ந்த இடங்கள் மட்டும் பளீரென தெரிந்தன. பலியிடப்பட்ட பிணங்களைப்போல மக்கள் தாறுமாறாக கிடந்தார்கள். இந்த வேளையில் தண்ணீர் தொட்டிக்குச் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும். எப்படியாவது வயிறு நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். குடித்தேதீர வேண்டும். பையை தூக்கி தோளில் மாட்டிக்கொண்டேன்.
‘என்னக்கா போகப்போறிங்களோ?’ என்று அந்த குண்டன் மீண்டும் கேட்டான். நான் அருகிருந்த அந்த வயோதிப தம்பதியரிடம் சொன்னேன்
“அம்மா அப்பா போயிட்டு வாறன். நான் தண்ணி தேடப்போறன். எனக்கு ஆறுதலாய் இருந்ததுக்கு உங்களுக்கு நன்றி’ என்று சொல்லி விட்டு மெதுவாக நடக்கமுற்பட்டேன்.
கால்கள் பாரமாய் கனத்தன. என் கால்களே எனக்கு அத்தனை பாரமாய் இருக்கும் என்று எனக்கு அதுவரை தெரியாது. என்னால் சீராக நடக்க முடியவில்லை. இலேசாக தலை சுற்றியது.
குறுக்குமறுக்காக மக்கள் படுத்துக்கிடந்தார்கள். கால் வைத்து நடக்க இடமே போதவில்லை. நினைவு வந்தவளாய் திரும்பிப் பார்த்தேன். என் கால்மாட்டில் கிடந்த பையன்களையும் கானவில்லை. போய்விட்டார்கள் போலும்.
மிககவனத்துடன் மற்றவர்களின் கால்களிளோ தலைகளிலோ இடறுப்பட்டு விடாமல் நடந்தேன். எங்கே செல்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. தன்ணீர் எங்கே கிடைக்குமென்றும் தெரியாது.
வரிசையாய் மின்குமிழ்கள் எரிந்த இடத்தை நோக்கி நடந்தேன். அருகே சென்றபோதுதான் அந்த மின்குமிழ் வரிசை கம்பி வேலி என்பதை அறிந்தேன். அடடா வேலியருகே வந்து விட்டேனே. அப்புறத்தில் படையினர் அல்லவா நிற்பார்கள் என்ற உண்மை அப்போதுதான் உரைத்தது. விர்ரெனக் கிளம்பிய எச்சரிக்கை உணர்வு என் கால்களை வேகமாக திரும்பவைத்தன.
பயணம் தொடரும்…
இறுதி நாட்களும் எனது பயணமும் – 11ஆனதி
ஈழநேசன்